சென்னை: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழகத்தில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டுமே பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர அனுமதிக்கப்பட்டது. ஆனாலும், கொரோனா நோய் தொற்று அதிகரித்ததை தொடர்ந்து வருகிற மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தமிழகத்தில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும் என்றார்.
அதேநேரம், விவசாயம் சார்ந்த தொழில்கள், குறு, சிறு தொழில்கள், மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், ஐடி ஊழியர்கள் உள்ளிட்ட சில பணிகளுக்கு மட்டும் தளர்வு அறிவிக்கப்பட்டு, அவைகள் 20ம் தேதி (நேற்று) முதல் செயல்படலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது. மேலும், மாநில அரசுகள் தங்கள் பகுதியில் எந்தெந்த நிறுவனங்களுக்கு தளர்வு அளிக்கலாம் என்பதை முடிவு செய்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டது. இருப்பினும், கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலினை கருத்தில் கொண்டு, நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் அனைத்தும் தொடரும் என கடந்த 20-ம் தேதி தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில், தமிழகத்தில் சில தொழிற்சாலைகளை படிப்படியாக அனுமதிப்பது, கொரோனா பரவாமல் இருக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக இன்று காலை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் தொழிலதிபர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து, தமிழகத்தில் எந்தெந்த ஆலைகள் தொடர்ந்து இயங்கலாம் என்ற அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. சுத்திகரிப்பு நிலையங்கள், இரும்பு, சிமெண்ட், பெயிண்ட் உள்ளிட்ட ரசாயன ஆலைகள், கரும்பு, உர கண்ணாடி, டயர், மிகப்பெரிய காகித ஆலைகள் ஆகியவை தொடர்ந்து இயங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.